Published : 24 Sep 2020 07:37 AM
Last Updated : 24 Sep 2020 07:37 AM

அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்து அமைச்சரின் தனி உதவியாளரை கடத்திய கும்பல்: குடோனில் கட்டிவைத்து அடித்தனர்; நகையை பறித்துக்கொண்டு தப்பினர்

கால்நடைத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனின் தனி உதவியாளரை காரில் கடத்திச் சென்ற கும்பல், செயின் மற்றும் மோதிரத்தை பறித்துக்கொண்டு அவரை விடுவித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியது: திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த தாந்தோணி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.கர்ணன் (எ) கனகராஜ் (35). இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக கால்நடைத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனின் தனி உதவியாளராக இருந்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல அமைச்;ரின் அலுவலகத்தில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் கொண்ட கும்பல், வலுக்கட்டாயமாக அவரை அலுவலகத்தில் இருந்து இழுத்துச்சென்று காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, தளி காவல் நிலையம் அருகே கர்ணனை இறக்கிவிட்ட கும்பல், காரில் தப்பிச்சென்றது. தளி காவல் நிலையத்துக்குச் சென்ற கர்ணன், நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதையடுத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் ஆகியோர் 4 மணி நேரத்துக்கும் மேலாக கர்ணனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தன்னை கடத்திய நபர்கள் யார் என தெரியாது எனவும், அவர்கள் கொங்கு மொழி வழக்கில் பேசியதாகவும், தான் அணிந்திருந்த தங்க மோதிரம், செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும், காரில் அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடிவருகின்றனர் என்றனர்.

தனது உதவியாளர் கடத்தப்பட்டது குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "இதில் ஈடுபட்ட நபர்கள் யார் என தெரியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை. இதுகுறித்து முறைப்படி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்றார்.

ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்

அமைச்சரின் உதவியாளர் கர்ணன் போலீஸ் விசாணையின்போது கூறியதாவது: மர்ம நபர்கள் ரூ.1 கோடி கேட்டனர். பின் ரூ.50 லட்சம் வேண்டும் என்றனர். அரசியல் பற்றி சில கேள்விகள் கேட்டனர், தெரியாது என்றேன். பின்னர் ஒரு குடோனுக்கு கொண்டு சென்று கட்டிவைத்து அடித்தனர். என்னிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துக் கொண்டனர். பிறகு வாளவாடி கிராமம் அருகே சென்றபோது, இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது. போலீஸிடம் புகார் அளிக்கக் கூடாது. நண்பர்கள் விளையாட்டாக செய்தனர் என கூற வேண்டும் என எச்சரித்து அனுப்பினர்.

பின்னர், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு ஏறி தளி பேரூராட்சியில் உள்ள அதிமுக பிரமுகர் குமரவேல் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். பிறகு போலீஸுக்கு தகவல் தெரிவித்தேன். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கலாம். இவ்வாறு அமைச்சரின் உதவியாளர் கர்ணன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x