Published : 23 Sep 2020 07:20 AM
Last Updated : 23 Sep 2020 07:20 AM

2-வது உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் வழக்கு இன்று விசாரணை: அவசர வழக்காக விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்

சென்னை

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு 2-வது முறையாக பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு பேரவை உரிமை மீறல் குழு ஏற்கெனவே பிறப்பித்த நோட்டீஸ், அடிப்படையில் தவறானது என்பதால் அதை செல்லாது என அறிவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2-வது முறை நோட்டீஸ்

இதே விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்களுக்கு 2-வது முறையாக உரிமை மீறல் குழு மீண்டும் நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் கோரியுள்ளது.

இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை கடந்த 2017-ல் விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இதை மீண்டும் விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி விலகியதால், இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு திமுக தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் நேற்று ஆஜராகி முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு செப்.23-ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு

முதல்வர் பழனிசாமி கடந்த 2017 பிப்ரவரி 18-ம் தேதி தனது அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்து, வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இந்த வாக்கெடுப்பை ரத்துசெய்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ரத்து செய்ய கோரிக்கை

அதில், ‘ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தும், அதை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர், திமுக உறுப்பினர்களை திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு, அதிமுக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதம் என்பதால், அந்த வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x