Published : 15 Sep 2020 10:08 AM
Last Updated : 15 Sep 2020 10:08 AM

நீட் தேர்வு முதல் கிசான் திட்ட முறைகேடு வரை; தமிழக அரசுக்கு கமல்ஹாசன் எழுப்பும் 10 கேள்விகள்

கமல்ஹாசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, கமல்ஹாசன் இன்று (செப். 15) வெளியிட்ட அறிக்கை:

"அதிகார நோக்குடனும், மக்கள் நலன் மீதான அலட்சியத்துடனும் அரசு இருந்தாலும், நம் கடமை ஆக்கப்பூர்வமாக செயல்படுவதே.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது மக்கள் நலன் கருதி அரசின் முன் நாம் வைக்கும் கேள்விகள்!

1. நீட் தேர்வு தேவை இல்லை

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சி எடுக்காமலும் நீட் தேர்வுக்குத் தடை வாங்குவதற்கு இருக்கின்ற நேர்மையான காரணங்களை வைத்து மத்திய அரசினை வழிக்குக் கொண்டு வராமலும் மாணவ, மாணவியருக்கு தேர்வுக்கான முறையான பயிற்சியும், தன்னம்பிக்கையும் தரத்தவறிய இந்த அரசால் இன்னும் எத்தனை மரணங்களை தமிழகம் தாங்கும்?

நிவாரணம் கொடுப்பதன் மூலம் பிரச்சினையை மூடி மறைக்க நினைக்கிறதா தமிழக அரசு?

2. கிசான் திட்ட முறைகேடு

வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கான உதவித்தொகையை உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கத் தவறியதன் மூலம், தன் ஊழல் முகத்தைக் கரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா?

3. ஆன்லைன் கல்வி முறைப்படுத்துதல்

ஆன்லைன் கல்வி முறையினை முறைப்படுத்தாமலும், அதற்கான தொழில்நுட்ப தேவைகளை மேம்படுத்துவது போன்ற மிக முக்கியமான திட்டங்களை முன்வைக்காமலும் அரசு அலட்சியப்போக்குக் காட்டுகின்றது. இவற்றை நெறிப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகின்றது?

4. கரோனா முறைகேடுகள்

முன் எச்சரிக்கை இல்லை, பாதுகாப்பு நடவடிக்கைகளில் முறையான சிந்தனை இல்லை, மக்களை கைகளை கழுவச் சொன்ன அரசு, இப்போது மக்களையே கைகழுவி விட்டது ஏன்? கரோனவால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு சொல்லும் பதில்தான் என்ன?

5. எட்டு வழிச்சாலைக்கு எதற்காக இத்தனை அவசரம்?

கரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலும். விவசாயத்துறையில் 3.4 சதவீதம் வளர்ச்சி எட்டிய நிலையில், எட்டு வழிச்சாலையை அமல்படுத்த ஏன் இந்த அரசு துடிக்கிறது?

6. மீனவர்கள் பாதுகாப்பு

பருவகால மழையினாலும் புயலினாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் மீனவர்களே. எனவே அவர்களின் பாதுகாப்பு, மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்புக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்த அரசு எப்போது கவனம் செலுத்தும்?

7. வேலைவாய்ப்பின்மை

வரலாறு காணாத ஜி.டி.பி. சரிவில் இருந்து மீள, வேலைவாய்ப்புகள் உருவாக்க என்று என்ன திட்டம் இந்த அரசு வைத்துள்ளது?

8. மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. தமிழகத்திற்கான பங்குகளை பெறுவதில் அழுத்தம் ஏன் இல்லை?

மாநில அரசு அழுத்தம் தராமல், மத்திய அரசிடம் நிதி பெறுவது சாத்தியம் இல்லை. ஜி.டி.பி. வீழ்ச்சியால், ஜி.எஸ்.டி. பங்கை பெறும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர யோசிப்பது ஏன்?

9. தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை எப்போது மூடத் தொடங்கும்?

அரசின் வருவாய்க்கு ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை கரோனா காலத்திலும் திறந்து, மக்களிடமிருந்து பணம் பிடுங்க ஏற்பாடு செய்தீர்கள். எப்போது ஜெயலலிதா சொன்னதை போல், டாஸ்மாக் கடைகளை மூடுவதை தொடங்கப் போகிறீர்கள்?

10. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேடு பள்ளமான சாலைகள், முறையற்ற மற்றும் பணி முடியாத மழைநீர் வடிகால் கால்வாய்கள், பரவும் டெங்கு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்து இருக்கிறீர்கள்?

இது போன்று மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல், குறுகிய காலத்தொடரென்று, இவ்வளவு குறுக்கி, மூன்றே நாட்களில் கண்துடைப்பாக சட்டப்பேரவைத் தொடரை நடத்தி முடிப்பது ஏன்?

மக்கள் சார்பாக மக்களுடன் நின்று மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக அரசிடம் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுமா தமிழக அரசு?"

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x