Last Updated : 14 Sep, 2020 06:25 PM

 

Published : 14 Sep 2020 06:25 PM
Last Updated : 14 Sep 2020 06:25 PM

மது விற்பனைபோல் மணல் விற்பனையையும் அரசே ஏற்று நடத்தினால் என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி

மதுபானம் விற்பதை போல் மணல் விற்பனையையும் அரசு ஏற்று நடத்தினால் என்ன? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்க தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுக்கள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

அதற்கு நீதிபதிகள், மணல் கடத்தல் விவகாரங்களில் லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா? கிராம நிர்வாக அலுவலர்கள், மின்வாரிய பொறியாளர்கள் மீது மட்டுமே லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்கிறது. அதிகபட்சம் காவல்துறை மீது லஞ்ச வழக்கு பதியப்படுகிறது.

மணல் கடத்தல் தொடர்பாக எத்தனை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மணல் கடத்தலில் தொடர்புடைய எத்தனை வாகனங்கள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? மணல் கடத்தலை தடுப்பது தொடர்பான அரசின் விதிமுறைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரியுமா? அரசின் உத்தரவுகளை எத்தனை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றுகிறார்கள்? என கேள்வி எழுப்பினர்.

மேலும், மணல் கடத்தலைத் தடுக்க உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஏன் விதிமுறைகளை உருவாக்கவில்லை

மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்?

டாஸ்மாக் விற்பனை போல மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் என்ன? ஒவ்வோர் ஆண்டும் மணல் கடத்தல் தொடர்பாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாகின்றன. அறிவியல் ரீதியாக மணல் கடத்தலை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்து விசாரணையை செப். 29ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x