Published : 14 Sep 2020 11:50 AM
Last Updated : 14 Sep 2020 11:50 AM

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 1208 கன அடி நீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 1208 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 3 மதகுகள் வழியே தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.

ஓசூர்

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 1208 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரகப் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் நடப்பாண்டில் முதல் முறையாக கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 1208 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. இதில் தற்போது அணையின் நீர் மட்டம் 40.44 அடியாக உள்ளது. ஓசூர் வட்டாட்சியர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 1208 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுவருகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள கெலவரப்பள்ளி, சின்னகொள்ளு, பெத்தகொள்ளு, பூதிநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

கிருஷ்ணகிரி அணை

கேஆர்பி அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று விநாடிக்கு 732 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 92 கன அடியாக உள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணையில் நேற்றைய நிலவரப்படி 37 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x