Published : 21 Sep 2015 09:16 PM
Last Updated : 21 Sep 2015 09:16 PM
கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.தங்கவேல் (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:
கடந்த 1957-ல் தொடங்கப்பட்ட அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் 1988-ல் பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 1988 முதல் ஆண்டுக்கு ரூ. 58 லட்சமும், 1992 முதல் 85.20 லட்சமும் பராமரிப்பு நிதியாக யுஜிசியிடமிருந்து பெற்று வருகிறது. யுஜிசி விதிகளின் படி 100 சதவீத பற்றாக்குறை மானியத்தை பெற்று இப்பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 23 முதல் மூத்த பேராசிரியர் ஒருவர் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இப்பல்கலைக்கழகம் சுயநிதி பல்கலைக்கழகமாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, இது குறித்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டியதில்லை. இப்பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தும் எண்ணம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை. இந்தியாவில் மொத்தம் 733 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 52 பல்கலைக்கழகங்கள் உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT