Published : 12 Sep 2020 08:34 PM
Last Updated : 12 Sep 2020 08:34 PM

நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு கோரி மனு: அரசு 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு நல திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரும் மனுவை 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ல் இயற்றப்பட்ட மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில், அரசின் திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும், அதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், அரசின் நிதி உதவி தொடர்பான திட்டங்களில் 25 சதவீத கூடுதல் தொகை வழங்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை அமல்படுத்தும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளின் உரிமைகளுக்கான சங்கம்த்தின் சார்பில் அதன் மாநில பொது செயலாளர் நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், இந்த சட்டத்தை வழிமுறைகளை முறையாக அமல்படுத்தாததால், 2019 பிப்ரவரில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றிற்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றரை ஆண்டுக்கும் முன்பாக அளித்த இந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை, 6 வாரத்தில் சட்டத்திற்குபட்டு பரிசீலித்து உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x