Published : 12 Sep 2020 06:24 PM
Last Updated : 12 Sep 2020 06:24 PM

முகக்கவசம் அணியாத வழக்கு; ரூ.1.89 கோடி அபராதம் வசூல்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

அரசின் சார்பில் முகக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1 கோடியே 89 இலட்சத்து 25 ஆயிரத்து 662 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:

“மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முதல்வர் அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித தொய்வும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ளவும், பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால்கள், ஏரி. குளம் மற்றும் வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி மழைநீர் வீணாகாமல் சேகரிக்கும் வகையில் தயார்நிலையில் இருக்க வேண்டும். பொது மக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் 700 MLD குடிநீரை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

மாநிலம் முழுவதும் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுசுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு வைரஸ் தொற்று பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவும் உள்ளது.

கரோனா வைரஸ் தொற்றிற்கு இதுவரை எந்த மருந்தும் இல்லாத நிலையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அவ்வப்பொழுது சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவற்றின் மூலமே இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும். எனவே, பொதுமக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வுகளை உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து ஏற்படுத்திட வேண்டும்.

தற்பொழுது, அரசின் சார்பில் முகக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இதுவரை 1 கோடியே 89 இலட்சத்து 25 ஆயிரத்து 662 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் நோக்கம் பொதுமக்களிடமிருந்து அபராதம் வசூலிப்பது அல்ல. எனவே, பொதுமக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் செப். 11 வரை 1,46,593 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,32,772 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்சமயம் 10,879 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன.

இதுநாள்வரை 11.87 இலட்சம் நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38,198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் உத்தரவின்படி, கோவிட் நோய் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 600 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 45.730 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 24,11,329 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 1,35,651 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது”. என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x