Published : 10 Sep 2020 08:40 AM
Last Updated : 10 Sep 2020 08:40 AM
அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க 26 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டங்களுக்குள் கடந்த 1-ம் தேதியும், மாவட்டங்கள் இடையே கடந்த 7-ம் தேதியும் அரசு பேருந்துகள் சேவை தொடங்கியது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் விரைவு, சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைவாக இருப்பதால், மொத்தம் உள்ள அரசு பேருந்துகளில் சுமார் 45 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து கேட்டபோது, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 3 இருக்கைகள் இடத்தில் இருவரும், 2 இருக்கை உள்ள இடத்தில் ஒருவரும், கடைசி இருக்கையில் 3 பேரும் அமரும்படி குறியீடுகள் போடப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடக்கத்தில் கரோனா அச்சத்தால் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் விரைவு, சொகுசு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, அடுத்த சில நாட்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய சுமார் 26 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யாமலும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT