Published : 05 Sep 2020 12:23 PM
Last Updated : 05 Sep 2020 12:23 PM

வெளிமாநிலத்திலிருந்து வருவோரின் இ-பாஸ் சரி பார்க்க தாமதம்: ஓசூர் அருகே மாநில எல்லையில் போக்குவரத்து நெரிசல்

ஓசூர் வழியாக தமிழகத்துக்குள் வரும் வாகனங்களில் இ-பாஸ் சரி பார்க்க தாமதம் ஏற்படுவதால் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க, தமிழகத்துக்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்பவர்களும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், தமிழக அரசு மாவட்டங்களுக்குள் செல்ல இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது. வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து தமிழகத் துக்குள் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகள் வழியாக தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ் பெற்று வருகின்றனரா என காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கர்நாடக மாநிலத்தில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் இ-பாஸ் உள்ளதா என ஓசூர் அருகே ஜூஜூவாடியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் சரி பார்க்கப்படுகிறது. இந்த சோதனைச்சாவடியில் இ-பாஸ் சரி பார்க்க தாமதம் ஏற்படுவதால், நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அத்திப்பள்ளி சோதனைச்சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இ-பாஸ் சரி பார்க்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக கூடுதல் அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x