Published : 05 Sep 2020 11:37 AM
Last Updated : 05 Sep 2020 11:37 AM

விறகு லாரியில் தந்தையுடன் பயணம்: தூக்கத்தில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப மரணம்

உடுமலை

மதுரையில் இருந்து விறகுக் கட்டை ஏற்றி வந்த லாரியில் பயணம் செய்த சிறுவன் தவறி விழுந்ததில் உயிரிழந்தது குறித்து மூலனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கோனேரிபட்டி பிரிவில் அடையாளம் தெரியாத 9 வயது சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறந்த சிறுவன் யார்? அவரது பெற்றோர் யார்? விபத்து எப்படி ஏற்பட்டது என மூலனூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, கோவை சூலூர் காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என செல்வம் என்பவர் புகார் அளித்திருந்தார். அவரை தொடர்பு கொண்ட மூலனூர் போலீஸார், கோனேரிபட்டியில் உயிரிழந்த சிறுவன் பற்றிய விவரங்களை தெரிவித்தபோது, காணாமல்போன சிறுவன்தான் இறந்து கிடந்தது உறுதியானது.

போலீஸார் விசாரணையில், ‘‘மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவர் தனது மகன்கள் பொன்னர் (9) சங்கர் (7) ஆகியோருடன், மதுரையில் இருந்து கோவை நோக்கி விறகு ஏற்றிச் சென்ற லாரியில் உதவிகேட்டு ஏறி வந்துள்ளார். 3 பேரும் விறகுக் கட்டைகளின் மீது படுத்து உறங்கியபடி வந்துள்ளனர். கோனேரிபட்டி அருகே வளைவில் திரும்பும்போது தவறி விழுந்த சிறுவன், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. சூலூர் அருகே சென்றபோது சிறுவனைக் காணாமல் செல்வம் அதிர்ச்சி அடைந்து, சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் பரமன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x