Published : 04 Sep 2020 08:19 AM
Last Updated : 04 Sep 2020 08:19 AM

பிரதமர் கிசான் திட்ட நிதி மோசடி; விழுப்புரம் மாவட்டத்தில் 11,200 பேரிடம் ரூ.4.48 கோடி பறிமுதல்: பெரம்பலூர் மாவட்டத்தில் 1,700 பேர் முறைகேடு

விழுப்புரம் / பெரம்பலூர்

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட மோசடியில் 11,200 போலி பயனாளிகளிடம் இருந்து ரூ.4.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கணக்கில் அந்த நிதி சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 1,700 பேர், ரூ.68 லட்சம் வரை முறைகேடாக நிதி உதவி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வரவு வைக்கப்படும். இடையில் இத்திட்டத்தில் ஆன்லைன் மூலமும் பயனாளிகள் சேரலாம் என்று தளர்வு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாத பலர் இத்திட்டத்தில் இணைந்து மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்களும் விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மோசடியில் ஈடுபட்ட 2 வட்டார வேளாண் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் மீதான வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, போலி பயனாளிகள் பெற்றத் தொகையை, அந்தந்த வங்கிகள் மூலம் திரும்ப பெற்று அரசின் கணக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் வேளாண் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில், கிசான் நிதியுதவித் திட்டத்தில் 42 ஆயிரம் போலி பயனாளிகள் சேர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 42 ஆயிரம் பேரில், இதுவரை 11,200 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் திரும்ப எடுக்கப்பட்டு, அந்த தொகை அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறாக போலி பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை

இந்த மோசடி சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து பலர் தாமாகவே வட்டார வேளாண் மையங்களை அணுகி தங்கள் பணத்தை திரும்ப வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். அப்படி செலுத்தாதவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்..

இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 1,700 பேர், 2 தவணைகளில் ரூ.68 லட்சம் முறைகேடாக நிதி உதவி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொய்யான தகவல் அளித்து முறைகேடாக நிதி உதவி பெற்றவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுட்டுள்ளனர். மேலும், முறைகேடாக நிதி உதவி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் அதிலிருந்து அரசிடம் பெற்ற நிதியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுவரை ரூ.11 லட்சம் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x