Published : 03 Sep 2020 08:47 PM
Last Updated : 03 Sep 2020 08:47 PM

நோட்டரி வழக்கறிஞர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளில் வந்த புகார்கள்; எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- அரசு, பார் கவுன்சில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

நோட்டரி வழக்கறிஞர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள உயர் நீதிமன்றம் அதை வகைப்படுத்தவேண்டும் எனவும், கடந்த 10 ஆண்டுகளில் வந்த புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசும், பார் கவுன்சிலும் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இளைஞர் ஒருவரைக் காதலித்து அவருடன் சென்றுவிட்டார். அவரைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி, அவரது தாய் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று வந்தது.

அப்போது, மாணவியின் திருமணப் பதிவு ஒப்பந்தத்துக்கு நோட்டரி வழக்கறிஞர் ஒருவர் சான்றளித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு அளிக்கப்பட்ட சான்றிதழ் செல்லுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ''நோட்டரிகளாக நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு வெளியில் காரில் அமர்ந்து கொண்டு, பணத்துக்காக இதுபோன்ற சான்றிதழ்களை வழங்குகின்றனர்'' எனக் கண்டனம் தெரிவித்தனர்.

நோட்டரி வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட பூர்த்தி செய்யப்படாத முத்திரைத்தாள்கள் எளிதாகப் பெட்டிக்கடைகளில் கிடைக்கின்றன. அந்தச் சான்றுகள் தவறாகப் பயன்படுத்தப்படும் என நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் நோட்டரி வழக்கறிஞர்களுக்கு எதிராக வந்த புகார்கள், அதன் மீது எடுத்த நடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க, தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x