Published : 03 Sep 2020 07:56 PM
Last Updated : 03 Sep 2020 07:56 PM

கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 3 பேர் மட்டுமே பயன்: முடங்கிய நிலையில் வெளிநாடுகளில் தலித் மாணவர்கள் முதுகலை படிப்பு திட்டம்- ரூ.1 கோடி நிதி பயன்படுத்தாமல் கையிருப்பு 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் பொறியியல், தொழில்நுட்பவியல், மருத்துவம், அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டப்படிப்பு படிப்பதற்கான திட்டம் போதிய வழிகாட்டுதல், விழிப்புணர்வு இல்லாமல் முடங்கிப்போய் உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தில் உள்ள மாணவர்கள் இதர பிரிவினருக்கு இணையாக பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.

ஆனால், இந்தத் திட்டங்களில் போதிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் அந்த மாணவர்கள் பயன்பெற முடியாமல் தவிக்கின்றனர்.

மத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் சுமார் 100 தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளிநாடுகளில் முனைவர் பட்டம் பெறுவதற்கு சிறப்புத் திட்டம் மூலம் நிதி உதவி செய்து வருகிறது.

அந்த வகையில் மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் டெல்லி அரசு ஆண்டுக்கு 100 தலித் மாணவர்களுக்கு வெளிநாட்டில் சென்று படிப்பதற்காக உயர்க்கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கர்நாடக அரசு ரூ.120 கோடியில் பிரபுத்தா என்ற திட்டத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வெளிநாடுகளில் பொறியியல், தொழில்நுட்பவியல், மருத்துவம், அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டப்படிப்பு படிப்பதற்கு ரூ.6 கோடி நிதி உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 2019-2020 கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 2012-13 முதல் 2019-20 நிதி ஆண்டு முடிய கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2,65,83,000 நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், வெறும் ரூ.1,66,79,000 நிதி மட்டுமே, தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி ரூ.99,04,000 பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இந்த தகவல்களை பெற்ற மதுரை திருமால்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: 012-13 முதல் 2019-20க்குட்பட்ட இந்த 8 ஆண்டுகளில் வெறும் 18 தலித் மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் சென்று படிக்க விண்ணப்பித்துள்ளனர்.

அதில் மூன்று மாணவர்கள் மட்டுமே ஜெர்மனி, லன்டன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு Bio Technology, Drug Discovery, Cellular Biology and Molecular Biology உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற படிக்க சென்றுள்ளனர்.

இதற்காக தமிழக அரசு ரூ.2,65,83,000 செலவிட்டுள்ளது. அதில், 2018-19 மற்றும் 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளில் தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் ஒருவருக்குக்கூட வெளிநாடு சென்று படிக்காததால் அந்த நிதி பயன்படுத்தாமல் உள்ளது.

ஆனால் இதுவே டெல்லி, கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் ஆண்டிற்கு ரூ.20 கோடிகள்வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழக தலித் மாணவர்கள் உயர்க்கல்விக்கு பின்னர் வெளிநாடுகளில் தங்கள் முதுகலைப்பட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் படிக்கவேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் கனவோடு காத்திருக்கின்றனர்.

இத்திட்டத்தை பற்றி அரசு போதுமான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் ஏற்படுத்தாததால் இத்திட்டம் கொண்டுவந்த நோக்கம் நிறைவேறாமல் பெயரளவில் இன்னும் சில காலங்களில் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும் என்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x