Published : 03 Sep 2020 03:31 PM
Last Updated : 03 Sep 2020 03:31 PM
தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப். 3) வெளியிட்ட அறிக்கை:
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை, மத்திய அரசு சிறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைச்செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயத் தொழிலாளர் அமைப்புகளும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தக் கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்ட இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட 22 அரசியல் கட்சிகள் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடி வரும் சூழலில், தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும்.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கவும், தினசரி ஊதியமாக ரூ.600 வழங்குவதையும் சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT