Published : 03 Sep 2020 12:54 PM
Last Updated : 03 Sep 2020 12:54 PM

செமஸ்டர் கட்டணத்தை கட்ட அண்ணா பல்கலைக்கழகம் நிர்பந்தம்; உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

செப்டம்பர் 5-ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களைச் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்துப் படிப்புகளுக்கும், நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான செமஸ்டருக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3-ம் தேதிக்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதிக்குள்ளும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இறுதிக் கெடுவுக்குள் கட்டணம் செலுத்தத் தவறும் மாணவர்கள், வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், மாணவர்கள் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, செப்டம்பர் 7-ம் தேதி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகஸ்ட் 5-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “கரோனா ஊரடங்கு காலத்தில் பல மாணவர்களின் பெற்றோர் வாழ்வாதாரம் இன்றித் தவிக்கும் நிலையில் செமஸ்டர் கட்டணத்தைச் செலுத்தக் கட்டாயப்படுத்துகின்றனர். செமஸ்டர் கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே கல்விக் கட்டணமாகவும், மீதமுள்ளவை ஆய்வகக் கட்டணம், நூலகக் கட்டணம், கணினி மையக் கட்டணம், இணையவழி சமூகக் கட்டணம் போன்ற கட்டணங்களாகவும் உள்ளன.

மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உள்ள நிலையில், மாணவர்கள் பயன்படுத்தாதவற்றிற்கும் கட்டணம் செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்படுத்தப்படுகின்றனர். கூடுதலாக வசூலிக்கப்படும் 60 சதவீதக் கட்டணத்தை வசூலிக்கத் தடைவிதிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாவிட்டால் பல்கலைக்கழக மாணவர்களை நீக்கம் செய்யும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மனுதாரர் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி முறையீடு செய்தார். அதனை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x