Published : 03 Sep 2020 08:04 AM
Last Updated : 03 Sep 2020 08:04 AM

2-வது நாளாக மக்கள் பயணம்; சென்னையில் 2,500 பேருந்துகள் இயக்கம்- ரூ.1,000 பாஸ் வாங்க பொதுமக்கள் ஆர்வம்

சென்னை

சென்னையில் நேற்று 2,500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. சில வழித்தட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை காவல்துறை எல்லையை கருத்தில் கொண்டு கூடுவாஞ்சேரி, திருமழிசை, பூந்தமல்லி, கோவளம்,செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளைஎல்லையாக கொண்டு கடந்த 2 நாட்களாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2-வது நாளான நேற்றுஇயக்கப்பட்ட 2,500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் மக்கள்ஆர்வமாக பயணம் செய்தனர்.

குறிப்பாக, தாம்பரம், திருவேற்காடு, பூந்தமல்லி, கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிலபேருந்துகளில் பயணிகள் நின்றபடியே பயணம் செய்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ரூ.1,000 பாஸ் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.41 லட்சம் பாஸ்கள் விற்பனையாகும்.

இந்த பாஸ் மூலம் ஏசி பேருந்து தவிர, மற்ற அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணம் செய்ய முடியும். இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் வாங்கியிருந்த ஆயிரம் ரூபாய் பாஸை வரும் 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதத்துக்கான பாஸை பொதுமக்கள், போக்குவரத்து கழக அலுவலகங்களில் நேற்று ஆர்வமாக வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

பொதுமக்கள் வரவேற்பு

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘தமிழக அரசு கரோனா ஊரடங்கில் தளர்வு அளித்து மாநகர பேருந்து சேவையை தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், ஏழை, எளிய மக்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது. மேலும், பேருந்து நிலையங்கள், பேருந்துகள் தூய்மையாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளில் இனி தொய்வு கூடாது’’என்றனர்.

தேவைக்கு ஏற்ப சேவை

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பேருந்துகளை தொடர்ந்து பராமரித்து இயக்கி வருகிறோம். பொதுமக்களும் ஆதரவு அளித்து,பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முதல்நாளில் இயக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் மூலம் ரூ.45 லட்சம் வசூலாகியுள்ளது.

தேவை அதிகரித்ததால், நேற்று கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கினோம். மேலும், சென்னையில் 25 இடங்களில் ஆயிரம் ரூபாய் பாஸ் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகளை நாங்கள் இயக்குவோம்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x