Published : 01 Sep 2020 06:47 PM
Last Updated : 01 Sep 2020 06:47 PM

வெப்பச் சலனம்; தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி புதுவை, காரைக்கால் உட்பட பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் .

வரும் புதன், வியாழக்கிழமைகளில் (செப். 02, 03 )மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை விவரம்:

பரமக்குடி (ராமநாதபுரம்) 13 செ.மீ., வேடசந்தூர் (திண்டுக்கல்) , புகையிலை தோட்ட அலுவலகம் வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 11 செ.மீ., காங்கேயம் (திருப்பூர்) 10 செ.மீ., ஆண்டிபட்டி (தேனி) 9 செ.மீ., நாவலூர் (திருச்சி ) 8 செ.மீ., மேட்டுப்பட்டி (மதுரை), பலவிடுதி (கரூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 7 செ.மீ., ஒகேனக்கல் (தருமபுரி), பென்னாகரம் (தருமபுரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), வடபத்துப்பட்டு (வேலூர்) தலா 6 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

செப்டம்பர் 01 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 02 அன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 01, 02 ஆகிய தேதிகளில் கேரளக் கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 01 முதல் செப்டம்பர் 05 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப்டம்பர் 02/2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 3.0 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x