Published : 01 Sep 2020 08:04 AM
Last Updated : 01 Sep 2020 08:04 AM
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் கடந்த 14-ம் தேதி வாயில் காயம்பட்ட நிலையில், உணவு உட்கொள்ள முடியாமல் 30 வயது மதிக்கத்தக்க `மக்னா' யானை சுற்றித் திரிவது வனத் துறையினருக்குத் தெரியவந்தது. கண்காணிப்பிலிருந்த அந்த யானை கடந்த 15-ம் தேதி மருதமலை வனப் பகுதியிலிருந்து வெளியேறி, தடாகம்-மாங்கரை-ஆனைக்கட்டி வழியாக கேரள வனப் பகுதிக்குள் சென்றது.
இது தொடர்பாக மன்னர்காடு மாவட்ட வன அலுவலருக்கு, கோவை மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கேரள வனத் துறையினர் தெற்கு காடம்பாற பகுதியில் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, வாயில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.
யானையின் நாக்குப் பகுதி சிதறி இருந்ததும், அதன் மேல் தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. காயம்பட்ட பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, மருந்து வைக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்திக்காகவும், காயத்துக்காகவும் ஊசி மூலம் யானையின் உடம்பில் மருந்து ஏற்றப்பட்டது. பின்னர், கேரள வனத் துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்கு யானையை அனுப்பினர்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி கோவை போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உட்பட்ட நரசிபுரம் பகுதியில் யானை தென்பட்டதால், உதவி வனப் பாதுகாவலர் தலைமையிலான குழுவினர், மக்னா யானையை கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர். வன கால்நடை அலுவலர் சுகுமாரின் அறிவுறுத்தலின்படி, குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகள் ஆகியவை, அரிசி மாவு, சோள மாவு மற்றும் சத்து மாவில் கலந்து மக்னா யானை நடமாடும் பகுதிகளில் வைக்கப்பட்டது. மேலும், வாழைப்பழம், தர்பூசணியும் வைக்கப்பட்டன. மருந்துகள் கலந்த உணவை யானை உட்கொண்ட காட்சி, கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, அந்த யானையைக் கண்காணித்து வருவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
‘மக்னா' யானை என்றால் என்ன?
யானையின் வெட்டுப்பற்களின் நீட்சிதான் தந்தம். ஆண் யானைகளுக்குள் மோதல்கள் வரும்போது, அவை தந்தத்தைத்தான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும். தந்தம் இல்லாத ஆண் யானை, மக்னா யானை என்றழைக்கப்படுகிறது. தந்தங்கள் இல்லாததால், மற்ற ஆண் யானைகளைவிட மக்னா யானைகளின் முகம், தும்பிக்கை பெரிதாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT