Published : 31 Aug 2020 07:25 AM
Last Updated : 31 Aug 2020 07:25 AM
தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நேற்றுகடைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால், அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் நேற்று மருந்து, பால் கடைகள் தவிர்த்து காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. திருமழிசை காய்கறி சந்தை, மாதவரம் பழச்சந்தை, காசிமேடு மீன் சந்தை ஆகியவையும் நேற்று செயல்படவில்லை.
சென்னை முழுவதும் 193 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணித்தனர். அவசியம் இன்றி வாகனத்தில் சுற்றியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழையமாமல்லபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடின. மாநிலம்முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின.பல்வேறு பகுதிகளில் சாலையோரமக்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கினர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தடையை மீறி மலர் வியாபாரம் நடைபெற்றது. தகவல் அறிந்த உள்ளாட்சி அதிகாரிகள், மலர்களை பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். சில இடங்களில் இறைச்சி, மீன் விற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT