Published : 27 Aug 2020 04:48 PM
Last Updated : 27 Aug 2020 04:48 PM

கரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி: மதுரை அரசு மருத்துவமனையில் தொடக்கம்

கரோனா நோயாளிகள், கழிப்பறைக்குள் செல்லும்போது சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறப்பதைத் தடுக்க மதுரை அரசு மருத்துவமனை கரோனா வார்டுகளில் உள்ள கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி (O2) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 லட்சத்து 38 ஆயிரத்து 060 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,839 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கடந்த காலங்களை விட இந்த நோய்க்கு உயிரிழப்பு குறைந்தாலும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சைப்பெறும் நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறும் நோயாளிகளில் பலர் கழிப்பறைக்கு செல்லும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கழிப்பறைகளில் நோயாளிகள் சவாசிக்க போதுமான சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் அவர்கள் உயிரிழப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் அத்தகைய உயிரிழப்பு நடக்கக்கூடாது என்பதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டுகளில் உள்ள கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது அதற்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டுகளில் உள்ள கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து டீன் சங்குமணி கூறியதாவது:

மருத்துவமனை கரோனா வார்டுகளில் சிகிச்சைப்பெறும் உள் நோயாளிகள் கழிப்பறைக்கு செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் அதிகமாக வாய்ப்புள்ளது.

அதனால், தீவிர தொற்று உள்ளவர்களை நாங்கள் கழிப்பறைக்கு செல்ல அனுமதிப்பதில்லை. மிதமான மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகள் மட்டுமே போதிய கண்காணிப்புடன் கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்கிறோம். அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதற்காக கழிப்பறை வாசல் மற்றும் உள்ளேயே ஆக்ஸிஜன் வாயு வசதி ஏற்படுத்தபப்டடுள்ளது. இதனால், நோயாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து ஆக்ஸிஜன் வாயு கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x