Published : 07 May 2014 12:00 AM
Last Updated : 07 May 2014 12:00 AM

அரசு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பணிந்தன தனியார் பள்ளிகள்: ஏழைகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க சம்மதம்

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.25 கோடியை விரைவில் வழங்கிவிடுவதாக தமிழக அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புக்கொண்டுள்ளன.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். குறிப்பிட்ட பள்ளிக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண அடிப்படையில் இதற்கு ஆகும் செலவை அரசு செலுத்திவிடும்.

தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2013-14ம் கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டார்கள்.

பள்ளிகள் முரண்டு

கடந்த ஆண்டில் அரசு தரவேண்டிய கட்டணத்தை (ரூ.25 கோடி) இன்னும் தராததால், வரும் கல்வி ஆண்டில் (2014-15) இலவச கட்டாயக் கல்விக்கான 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் கூட்டாக அறிவித்தன.

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

தனியார் பள்ளிகளின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காத தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. அரசுத் தரப்பில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.நந்தகுமார், பாதுகாப்புக்குழு தலைவர் கே.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘விரைவில் ரூ.25 கோடி’

கடந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து, வரும் ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புக்கொண்டன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை மேலும் கூறியதாவது:

2013-14ம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் விரைவில் வழங்கப்படும். அது மத்திய நிதியில் இருந்து வழங்கப்படுமா, மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மே 18-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து மட்டுமல்லாமல் குறிப்பிட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளோம். கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிச்சை கூறினார்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘கல்விக் கட்டண பாக்கி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தயாராக உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x