Published : 22 Aug 2020 12:07 PM
Last Updated : 22 Aug 2020 12:07 PM

இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?-கனிமொழி கேள்வி

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக மருத்துவர்கள் இணைய வழியில் ஆட்சேபம் தெரிவித்தபோது ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் கொடேச்சாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அனைத்து மாநில அரசுத்துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

தொடக்கத்திலிருந்தே அனைத்து வகுப்புகளும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இந்தியில் வகுப்புகளை நடத்துவது தங்களுக்குப் புரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் நடத்தும்படி தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு இணையவழியில் தகவல் அனுப்பியுள்ளனர். ஆனால், அவற்றுக்கு எந்தப் பயனும் இல்லை.

மூன்றாவது நாள் வகுப்பை அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நடத்தியுள்ளார். அவரும் முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே வகுப்பை நடத்தியுள்ளார். ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்கவில்லை.

தமக்கு சரளமாக ஆங்கில பேச வராது என்றும், அதனால் இந்தியில் மட்டும் தான் வகுப்பு நடத்த முடியும் என்றும் கூறியுள்ளார். அப்போது அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா,கேரள மாநில மருத்துவர்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இது தற்போது சர்ச்சையாகி வருகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது திமுக எம்.பி. கனிமொழியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இந்தி தெரியாதவர்கள் இன்னும் எத்தனை நாள் அவமானப்படவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமொழியின் ட்விட்டர் பதிவு:

“மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?”

இவ்வாறு கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x