Published : 21 Aug 2020 05:28 PM
Last Updated : 21 Aug 2020 05:28 PM

மாநகராட்சி பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி: எப்படி விண்ணப்பிப்பது?- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சித்தரிப்புப் படம்

சென்னை

சென்னை மாநகராட்சியில் பயின்ற பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்கள், பெண்களுக்கு (வயது வரம்பில்லை) 6 பிரிவுகளில் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பிக்க சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வருமாறு:

“சென்னை பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களின் எதிர்காலம் சிறக்க மத்திய அரசின் NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற் பயிற்சி கீழ்காணும் தொழிற் பாட பிரிவுகளில் அளிக்கப்படுகின்றது.

1. கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் (Computer) 1 வருடம் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 48. தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி

2. குழாய் பொருத்துநர் (plumber) 1 வருடம் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 48. தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி


3 பொருத்துநர் (fitter) 2 வருடம் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 20. தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி


4. கம்மியர் மோட்டார் வாகனம் (Motor Mechanic Vehicle) 2 வருடம் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 24. தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி


5. மின்பணியாளர் (Electrician) 2 வருடம் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 20. தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி


6. எலக்ட்ரானிக் மெக்கானிக் (ElectronicMechanic) 2 வருடம் மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 24. தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி

மொத்தம் மாணவர்கள் சேர்க்கைக்கான எண்ணிக்கை 184.

சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சம் முற்றிலும் இலவச பயிற்சி அளிப்பதாகும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ், மற்றும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.500/-பயிற்சி உதவி தொகை வழங்கப்படுகின்றது. மேலும் இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது.

2020-2021ம் கல்வி ஆண்டிற்கு தொழிற் பயிற்சியில் சேர கரோனா வைரஸ் தொற்று காரணமாக விண்ணப்பப் படிவம் இணையதள முகவரி (web address) www.chennaicorporation.gov.in மற்றும் தொழிற் பயிற்சி நிலைய இணையதளம் gccapp.chennaicorporation.gov.in/cciti/ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் (scan) செய்து விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து பின்வரும் சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலைய மின்னஞ்சலுக்கு ( (E-mail) chennaicorporationiti@gmail.com அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மேலும் விண்ணப்பப் படிவம் சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்திலும் இலவசமாக பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து வழங்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 03/2020. மேலும் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் செப்டம்பர் 07/2020. கலந்தாய்வில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்) கலந்துகொள்ள வேண்டும்.

கலந்தாய்வின் போது விண்ணப்பதாரரின் மதிப்பெண் தகுதி தரவரிசையின்படி மற்றும் அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து கலந்தாய்வு அன்று பயிற்சியில் சேருவதற்கான அனுமதி வழங்கப்படும்.

பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. மேலும் பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவம் கீழ்கண்ட முகவரியில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

முகவரி:-

சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம்,
‘நு’ டிப்போ லாரி நிலையம் ரோடு, முத்தையா தெரு அருகில்,
லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை–14.
தொலைபேசி எண் : 044 – 28473117
கைபேசி எண் : 70104 57571.

பேருந்து நிறுத்தம் : ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அருகில் அல்லது யெல்லோ பேஜஸ் (yellow pages)”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x