Published : 20 Aug 2020 07:52 AM
Last Updated : 20 Aug 2020 07:52 AM

ஆண்டிபட்டியில் துயர சம்பவம்: மனைவி, மகன் இறந்த சோகம்; மற்றொரு மகனுடன் கணவரும் தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மனைவி, மகன் உயிரிழந்த சோகத்தில் தனது மற்றொரு மகனுடன் கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(55). இவரது மனைவி ராமலட்சுமி(50). ஆண்டிபட்டியில் துணிக்கடை நடத்தி வந்தனர். இவர்களது மகன்கள் வசந்த்(24), சசிக்குமார்(19).

இந்நிலையில் இளைய மகனான சசிகுமார், கடந்த மே மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேனி வந்துள்ளார். அப்போது மாவட்ட எல்லையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் சசிகுமாருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், அவரை போடியில் உள்ள தனியார் கல்லூரியில் சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தினர். பல நாட்களாக அங்கு இருந்ததால் விரக்தி அடைந்த சசிகுமார், கடந்த மே 17-ம் தேதி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனால் அவரது தாயார் ராமலட்சுமி மிகுந்த மன உளைச்சலுடன் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் உடல்நிலை பாதித்து நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

தனது மனைவியும், மகனும் இறந்ததால் மணிகண்டன் மிகுந்த மன வேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை தனது ஊரில் இருந்து ஆண்டிபட்டிக்கு மணிகண்டன் தனது இன்னொரு மகன் வசந்துடன் வந்துள்ளார். அங்கு இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஆண்டிபட்டி போலீஸார் அவர்களின் உடல்களை கைப்பற்றி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே உயிரிழக்க கரோனா வைரஸ் காரணமாக இருந்த சம்பவம், ஆண்டிபட்டி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x