Published : 20 Aug 2020 07:43 AM
Last Updated : 20 Aug 2020 07:43 AM

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு

அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கூட்ட அரங்கில், வாரியத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில், பயனாளிகளின் பங்களிப்புடன் கூடிய தனிவீடுகள் கட்டுமானம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் உறைவிட மேம்பாட்டு திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் நகர்ப்புற ஏழைகளுக்கான பேரிடர் எதிர்கொள்ளும் நிலைக்கத்தக்க வீட்டுவசதி திட்டம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் விரைவாகமுடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர்ராஜேஷ் லக்கானி, குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர் தா.கார்த்திகேயன், மேலாண் இணை இயக்குநர் கோபால சுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x