Last Updated : 19 Aug, 2020 09:45 PM

 

Published : 19 Aug 2020 09:45 PM
Last Updated : 19 Aug 2020 09:45 PM

புதிய பாம்பன் பாலம் பணியை செப்.,2021-ல் முடிக்க இலக்கு: கோட்ட மேலாளர் லெனின் தகவல்  

மதுரை  

ரயில்வே துறை கரோனா ஊரடங்கிலும் பல்வேறு சவால்களுடன் கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளைக் கையாண்டு மக்களுக்கு சிறந்த சேவை புரிந்துள்ளது என, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் இணைய வழியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி , மதுரை கோட்டம் தண்டவாள பராமரிப்பு , மின்தடங்கள் , சைகை அமைப்புக்கள் வேலைகளை செய்து முடித்திருக்கிறோம். இப்பணிகளை போக்குவரத்து இருக்கும்போது செய்வது கடினம்.

கடம்பூர்- வாஞ்சி மணியாச்சி -தட்டப்பாறை / வாஞ்சி மணியாச்சி - கங்கைகொண்டான் பிரிவில் 44 கி.மீ தூரத்திற்கு ரயில்வே இரட்டை பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இது மதுரைக்கு தெற்கே நிறைவுசெய்யப்பட்ட முதலாவது இரட்டைபாதை.

இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பாதையில் விரைவாக ரயில்களை இயக்கலாம். மதுரை –வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இரட்டைபாதையின் மொத்த தூரம் 159 கி.மீ. திட்ட செலவு ரூ .1536 கோடி . 2020-21-ஆம் ஆண்டு , 101 கி.மீ தூரம் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீளவிட்டான் - மேல்மருதூர் புதிய ரயில் பாதைக்கென மீளா விட்டான் யார்டில் மறுசீரமைப்பு பணிகளும் நிறைவு பெற்றது. இது மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக அமைய இருக்கும் புதிய வழித்தடத்தின் ஒரு பகுதி.

மதுரை -உசிலம்பட்டி இடையே அகல ரயில் பாதை பிப்ரவரி 2020 -ல் திறக்கப்பட்டது. மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை திட்டத்தின் தற்போதைய திட்ட மதிப்பு ரூ .450 கோடிகள் . உசிலம் பட்டி -ஆண்டிபட்டி இடையே பணிகள் நவம்பர் 2020 க்குள் முடிக்கவும், ஆண்டிபட்டி -தேனி இடையே பிப்ரவரி 2021 லும், தேனி –போடி நாயக்கனுர் இடையே செப்டம்பர் 2021 க்குள் நிறைவு செய்யப்படும். மதுரை- தூத்துக்குடி -திருநெல்வேலி இரட்டைப்பாதை மொத்தம் 188 கி.மீ., தூரத்தில் 44 கி.மீ., பணி முடிந்துள்ளது.

புதிய பாம்பன் பாலத்தின் மொத்த நீளம் 2078 மீட்டர். செப்., 2021க்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம்- தனுஷ்கோடி புதியபாதை தூரம் 18.7 கி.மீ., இதன் திட்டமதிப்பு ரூ. 208.3 கோடி. மதுரை -தூத்துக்குடி புதிய ரயில் பாதை (அருப்புக் கோட்டை வழி) மொத்தம் 135 கி.மீ., தூரத்திற்கு ரூ.120கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக , மதுரை கோட்டம் 35 சிறப்பு ரயில்களை இயக்கி, 35618 பயணிகளை ஏற்றி சென்றிருக்கிறது.

மதுரை ரயில்வே மருத்துவமனை இதுவரை 220 நோயாளிகளை குணப்படுத்தியுள்ளது. சரக்கு போக்குவரத்தின் மூலம் , மதுரை கோட்டம் இந்த நிதி ஆண்டில் ரூ 71.56 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x