Published : 19 Aug 2020 07:49 AM
Last Updated : 19 Aug 2020 07:49 AM

மது அருந்துவோர் கூடாரமான ஸ்ரீபெரும்புதூர் யானை இல்லம்

ஸ்ரீபெரும்புதூர் கோயில் யானை கோதையை பராமரிக்க புதிதாக அமைக்கப்பட்டு, இன்னமும் திறக்கப்படாத இல்லம். படம்: பெ.ஜேம்ஸ்குமார்

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் யானை கோதைக்குகட்டப்பட்ட புதிய இல்லம் திறக்கப்படாமல் உள்ளதால், அந்த இடம் மது அருந்தும் கூடமாக மாறியிருப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் நிர்வாகத்தால் கோதைஎன்ற 23 வயது பெண் யானை பராமரிக்கப்படுகிறது. கோதையை பராமரிக்ககோயிலுக்கு சொந்தமான ஜீயர்தோப்பில் ரூ.20 லட்சம் செலவில் புதிய இல்லம் கட்டப்பட்டு ஒரு வருடமாகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அந்த இல்லம் மது அருந்துவோரின் கூடாரமாக மாறியுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது: யானைக்கான புதிய இல்லம்அமைந்துள்ள ஜீயர் தோப்பை மதுஅருந்தும் இடமாக சிலர் பயன்படுத்துகின்றனர். எனவே இங்கிருந்து மது அருந்துவோரை அப்புறப்படுத்துவதுடன், இந்த இடத்துக்கு அருகில் கண்காணிப்பு கேமராவையும் போலீஸார் அமைக்க வேண்டும்.

இதையடுத்து கோயில் நிர்வாகம் இப்புதிய இல்லத்தை மூடி வைக்காமல் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துகோதை யானையை பராமரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி கூறியதாவது: புதிதாக கட்டப்பட்ட இல்லத்தில் பாதுகாப்பு வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லாததால் பலர் அசுத்தம் செய்கின்றனர். சுற்றுச்சுவர் அமைக்க ஆகும் ரூ.65 லட்சம் தொகையை தனியாரிடம் நன்கொடை பெற ஆலோசித்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x