Published : 18 Aug 2020 05:44 PM
Last Updated : 18 Aug 2020 05:44 PM

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய பல்: வெற்றிகரமாக அகற்றி காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

மதுரை

ஆடிக் கொண்டிருந்த பல்லை 7 வயது குழந்தை விழுங்கியதால் அந்த பல் மூச்சுக்குழாயில் சென்று அடைத்துக் கொண்டது. 20 நாட்களுக்க மேலாக சுவாசிக்க முடியாமல் போராடிய அந்தக் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய பல்லை வெற்றிகரமாக அகற்றி மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், இளையங்குடி அருகே அரியாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது ஏழு வயது குழந்தை பாலராகவன். கடந்த 5-ம் தேதி பாலராகவனுக்கு கடவாய்ப் பல் ஒன்று ஆடிக் கொண்டிருந்தது.

வலி தாங்க முடியாமல் ஆடிக்கொண்டிருந்த அந்தப் பல்லை பிடித்து இழுத்துள்ளது. பல் வெளியே வராமல் குழந்தை விழுங்கிவிட்டது. அழுது கொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளது. தொந்தரவு எதுவும் இல்லாததால் பெற்றோரும் அது உணவுக்குழாய் வழியே வயிற்றுக்குள் சென்றிருக்கும் என்று அமைதியாகிவிட்டனர்.

ஆனால், கடந்த 10 நாட்களுக்குப் பிறகு குழந்தைக்கு தொடர் காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. அதற்காக உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனால், குணமடையாததால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளனர்.

அங்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் குழந்தை விழுங்கிய அந்த பல் வலது நுரையீரலின் மூச்சுக் குழாயை அடைந்து கொண்டிருப்பது தெரியவந்தது. குழந்தை சுவாசிப்பதற்கே சிரமப்பட்டது.

உடனே மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 29ம் தேதி காது மூக்கு தொண்டை துறை தலைவர் தினகரன், குழந்தைகள் நலத்துறை தலைவர் பாலசங்கர் மற்றும்

மயக்க மருத்துவர்கள் உதவியுடன் பிராங்கோஸ்கோப்பி மூலம் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த பல் வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர். அதன்பிறகு குழந்தைக்கு 5 நாட்கள் நுரையீரல் கிருமி தொற்றுக்கான சிகிச்சை அளித்தனர். தற்போது குழந்தை முற்றிலும் குணமடைந்ததால் பெற்றோர் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

டீன் சங்குமணி மூச்சுக்குழாயில் சிக்கிய பல்லை அகற்றி, குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவக்குழுவை பாராட்டினார்.

அவர் கூறுகையில், ‘‘குழந்தைகள் கூறும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான தொந்தரவுகளை அலட்சியம் செய்யாமல் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

எந்தப் பிரச்சனையையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அரசு மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்துச்சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தாமதமாக வருவதால் அதுவே குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x