Published : 18 Aug 2020 05:42 PM
Last Updated : 18 Aug 2020 05:42 PM

வடக்கு வங்கக்கடலில் ஆக.19-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கடலோர மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வடக்கு வங்கக்கடலில் ஒடிசா, மேற்கு வங்கத்தை ஒட்டி ஆக.19 அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவக்காற்று காரணமாக வடக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் , கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

நீலகிரி மாவட்டத்தில் தேவலா 5 செ.மீ, பந்தலூர் 2 செ.மீ, மேல் பவானி, அவலாஞ்சி , ஹாரிசன் எஸ்டேட் , பிரையர் எஸ்டேட் தலா 1 செ.மீ தளி (கிருஷ்ணகிரி ) 2செ.மீ, ஏற்காடு (சேலம் ) 1செ.மீ.

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நாளை ஆகஸ்ட் 19 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்டு 18 முதல் ஆகஸ்டு 20 வரை வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்டு 18, 19 ஆகிய தேதிகளில் கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்டு 20 முதல் ஆகஸ்டு 22 வரை வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்டு 18 முதல் ஆகஸ்டு 22 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்டு 19 /2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 1.5 முதல் 2.7 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x