Published : 17 Aug 2020 07:28 AM
Last Updated : 17 Aug 2020 07:28 AM

‘தேமதுரக் குரலோசை மீண்டும் ஒலிக்கட்டும்’- எஸ்பிபி பூரண குணமடைய துணை முதல்வர் வாழ்த்து

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண குணமடைய வேண்டும் என்றுஅரசியல் தலைவர்கள், திரைஉலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தனது அற்புதக் குரல்வளத்தால் தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடம்பிடித்து, அவர்தம் மனங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டி அவர்களது அன்பை பெற்றவர் எஸ்பிபி. எம்ஜிஆரின் அன்பை பெற்று அவர் நடித்த ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ என்னும் பாடலுடன், தனது திரையுலக வரலாற்றில் திருப்புமுனை கண்டு இதுவரை ஏறுமுகம் அன்றி வேறுமுகம் காணாதவர். தேனினும் இனிய அவரது தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட, அவர் பூரண நலம் பெற்று மீண்டு வருக என அன்புடன் வாழ்த்துகிறேன்.

நடிகை குஷ்பு: நமது தினசரி வாழ்க்கையாகவே மாறிவிட்ட ஒரு மனிதர் எஸ்பிபி. என் பயணம் முழுவதும் அவருடனேயே வாழ்கிறேன். கடவுளுக்கு இணையாக அவரை பார்க்கிறேன். எங்களுக்காக அவர் நிச்சயம் மீண்டு வந்து பாடுவார்.

நடிகர் மோகன்: நான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பிருந்தே எஸ்பிபி-யின் ரசிகன். நான் நடிக்க வருவேன் என்றோ, எனக்கு மிகவும் பிடித்த எஸ்பிபி-யின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நினைத்துக்கூட பார்த்தது இல்லை. அன்புள்ளம் கொண்ட அவர் பூரண நலம் பெற்று, பழையபடி வலம் வரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x