Published : 14 Aug 2020 12:22 PM
Last Updated : 14 Aug 2020 12:22 PM

கல்லூரி சேர்க்கை தொடர்பாக செல்பவர்களுக்கு இ-பாஸ் முறை ரத்து செய்யப்படவேண்டும்: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

கல்லூரி சேர்க்கைக்காக செல்லும் மாணவர், உடன் செல்வோருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து மதிப்பெண் சான்றிதழை காட்டினால் அனுமதிக்கவேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லவேண்டுமானால் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவம், மரணம், திருமணம் போன்றவற்றிற்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது.

இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் இதைப்பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகர்கள் பணம் சம்பாதிப்பதும் உண்மையாக இ-பாஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கிடைக்காமல் போவதும் நடக்கிறது. இ-பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்தபின்னரும், தமிழகத்தில் அமலில் உள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரியில் சேர்க்கை தொடங்கியுள்ளது. கல்லூரி சேர்க்கைக்காக மாணவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது இதில் இ-பாஸ் நடைமுறை அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால்,அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே,மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும்; மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என @CMOTamilNadu உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது”.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x