Published : 31 May 2014 10:00 AM
Last Updated : 31 May 2014 10:00 AM
தனது 3 குழந்தைகளை விற்ற தந்தை, 4-வது குழந்தையை விற்க முயன்றபோது போலீஸிடம் சிக்கினார்.
சென்னை வில்லிவாக்கம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரேம்ராஜ்(37). இவரது மனைவி மஞ்சு(32). வியாழக்கிழமை இரவு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு நின்று கொண்டு "எனது 8 மாத பெண் குழந்தையை விற்கப்போகிறேன். ரூ.30 ஆயிரம் கொடுத்தால் அந்த குழந்தையை கொடுக்கிறேன்" என்று பிரேம்ராஜ் அங்கு வருபவர்களிடம் கூறினாராம்.
இந்த தகவலை எழும்பூர் காவல் நிலையத்தில் யாரோ தெரிவிக்க, உதவி ஆணையர் கலிதீர்த்தன், ஆய்வாளர் மதியரசு மற்றும் காவலர்கள் விரைந்து வந்து பிரேம்ராஜை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கெனவே 3 குழந்தைகளை விற்பனை செய்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
பிரேம்குமார், மஞ்சு தம்பதிக்கு 2008-ம் ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்றிருக்கிறார். 2010-ம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தையை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்றிருக்கிறார். 2012-ம் ஆண்டில் பிறந்த பெண் குழந்தையை அயனாவரத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.30 ஆயிரத்துக்கு விற்றிருக்கிறார். தற்போது 4-வது குழந்தையை விற்க முயன்றபோது சிக்கிக்கொண்டார்.
பிரேம்குமார் குழந்தைகளை விற்பனை செய்யும் தகவல் 2013-ம் ஆண்டில் பெரம்பூர் குழந்தைகள் நல பாதுகாப்புத் துறை இயக்குநர் குளோரிக்கு தெரியவர, அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது பிரேம்குமார் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பின்னர் 4-வது குழந்தையையும் விற்கப்போவதாக குளோரிக்கு தகவல் கிடைக்க மஞ்சுவையும், கைக்குழந்தையையும் பெரம்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்து விட்டிருக்கிறார் குளோரி. ஆனால் அங்கிருந்த மஞ்சு மீண்டும் வீட்டுக்கு வரவே பிரேம்ராஜ் வழக்கமான வேலையை தொடங்கியிருக்கிறார் என்று போலீஸார் கூறினர்.
எழும்பூர் மருத்துவமனையில் ஏற்கெனவே சில குழந்தைகள் திருடு போயுள்ளன. பிரேம்ராஜ் திருடி விற்றிருக்கலாம் என்று போலீஸுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
பிரேம்குமாரின் மனைவி மஞ்சு கூறும்போது, "என்னை குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் மாதிரிதான் வைத்திருந்தார். குழந்தைகளை விற்ற பணத்தை மது குடித்தே கரைத்தார். ஒவ்வொரு குழந்தையை விற்கும்போதும் நான் அவரிடம் கெஞ்சுவேன். ஆனால் என் பேச்சு எடுபடாது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT