Published : 06 Aug 2020 08:07 AM
Last Updated : 06 Aug 2020 08:07 AM
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில்அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத் தலைவரான இவர் திருப்போரூர் அருகேயுள்ள செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், இதயவர்மன் குடும்பத்தினருக்கும் நிலத் தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது மோதலாக உருவெடுத்த நிலையில் லட்சுமிபதி தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மன், அவரது தந்தை உள்ளிட்டோர் மீது திருப்போரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இதயவர்மனை கைது செய்தனர்.
இந்நிலையில் இதயவர்மன் உள்ளிட்ட 11 பேர் தங்களுக்கு ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், இதயவர்மன் உரிமம் காலாவதியான துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், இதயவர்மனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எனவேஇதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் காயமடைந்தோரின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்யஉத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT