Published : 03 Aug 2020 07:07 AM
Last Updated : 03 Aug 2020 07:07 AM

தமிழக விமான நிலையங்கள் வழியாக 400 கிலோ தங்கம் கடத்தல் பற்றி என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கேரள தங்க கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து தீவிர ஆய்வு

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக விமான நிலையங்களின் வழியாக கடத்தப்பட்ட 400 கிலோ தங்கம் உட்பட பல்வேறு கடத்தல் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு கடந்த மாதம் 4-ம் தேதி, உணவுப் பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித், கேரள தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் மேலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுக் குழு விசாரணை கோரி பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்எழுதினார். இதன் தொடர்ச்சியாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு கண்டறியப்பட்டதால் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக கொச்சி
என்ஐஏ டிஐஜி கே.பி.வந்தனா தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானத்தில் சென்னை வந்தனர்.

அவர்கள், சென்னை விமான நிலையம் வழியாக நடந்த தங்க கடத்தல் வழக்குகள் குறித்து சுங்கத் துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சூளைமேட்டில் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு, அதே மாதம் ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் வந்த தென் கொரிய நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் கடத்தி வந்த 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றின் விவரங்களை வருவாய் புலனாய்வுத் துறையினரிடம் என்ஐஏ அதிகாரிகள் கேட்டு பெற்றனர்.

இந்த இரு வழக்குகள் உட்பட சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்கள் வழியாக நடந்த சுமார் 400 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்களுடன் டிஐஜி வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கொச்சிக்கு மீண்டும் விமானத்
தில் புறப்பட்டுச் சென்றனர். அதேவேளையில் சென்னையில் உள்ள என்ஐஏ குழுவினர், இந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்
பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகின்றனர். இதில், கடத்தல்காரர்களுக்கு உதவிய சுங்கத் துறை மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x