Published : 03 Aug 2020 06:59 AM
Last Updated : 03 Aug 2020 06:59 AM
முழு ஊரடங்கு அமலில் இருந்தும் சென்னையில் மக்கள் பாரம்பரிய முறைப்படி வீடுகளில் வழிபாடு செய்து கூழ் தயாரித்து அனைவருக்கும் விநியோகம் செய்தனர்.
தமிழகத்தில் ஆடிப்பெருக்கை ஒட்டி பொதுமக்கள் நீர்நிலைகளுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம். திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இவ்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சென்னையைப் பொறுத்தவரை ஆடிப்பெருக்கு (ஆடி 18-ம் தேதி) நாளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த வழிபாடுகளில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். பெண்கள் அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்து படைத்து வழிபாடு செய்வர்.
ஆடி மாதம் முழுவதும் வீடுகளிலும், அம்மன் கோயில்களிலும் கூழ் ஊற்றப்படும். இருப்பினும், ஆடிப்பெருக்கு நாளில் கூழ் ஊற்றுவது விசேஷமாக கருதப்படும். இந்நிலையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆடிப்பெருக்கையொட்டி சென்னையில் நேற்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். மேலும், வீடுகளில் கூழ் தயாரித்து பொதுமக்களுக்கும், அருகாமையில் உள்ள வீடுகளில் இருப்பவர்களுக்கும் விநியோகம் செய்தனர். புதிய மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு, அம்மனை வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT