Last Updated : 30 Jul, 2020 05:23 PM

 

Published : 30 Jul 2020 05:23 PM
Last Updated : 30 Jul 2020 05:23 PM

ஆசியாவிலேயே முதல் முறையாக 8 மணிநேரப் பணி உரிமை பெற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிர் நீத்த தினம்; தியாகிகள் சிலைக்கு அஞ்சலி

பிரெஞ்சு ராணுவ துப்பாக்கிச் சூட்டில் புதுச்சேரியில் 12 பேர் உயிர் நீத்த தினத்தையொட்டி தியாகிகள் சிலைக்கு பல்வேறு தொழிற்சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, ஆசியாவிலேயே முதல் முறையாக 8 மணி நேரப் பணி உரிமை பெறப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த 1936-ம் ஆண்டு ஜுலை 30-ம் நாள்,எட்டு மணிநேர வேலை உரிமை கோரி, தளர்வற்ற தொடர் போராட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிரெஞ்சு ராணுவம், தொழிலாளர்கள் மீது துப்பாக்கிகளைக் கொண்டு தாக்கியது. பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.

பிரான்சிலும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை எதிரொலித்ததையடுத்து, 1937-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் புதுச்சேரி தொழிலாளர்களுக்கான எட்டு மணிநேர வேலை உரிமைச் சட்டமும், தொழிற்சங்கம் உரிமைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

உரிமை போரில் உயிர்நீத்தத் தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 30-ம் தேதி அன்று தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

குறிப்பாக, 12 தொழிலாளர்களைத் துப்பாக்கியால் சுடப்பட்ட காலை 9 மணிக்கு ஆலை சங்கு ஒலிக்கப்பட்டது. அப்போது, மலர்வளையம் வைத்துத் தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுச்சேரியின் தொழிற்சங்க ஸ்தாபகர் வ.சுப்பையா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு உலகம் முழுவதும் எழுந்த ஆதரவு அலை பிரெஞ்சு அரசைப் பணிய வைத்தது என்பது வரலாறு என்று இங்கு கூடியோர் நினைவுகூர்ந்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஏஐடியூசி, சிஐடியூ போன்ற பல்வேறு தொழிற்சங்கத்தினர் மலர் அஞ்சலி செலுத்தக் குவிந்தனர். தியாகிகள் நினைவிடத்தில் ஏஐடியூசி செயலாளர் அபிஷேகம், தொழிலாளர்கள் உறுதி மொழி வாசித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ராஜாங்கம் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x