திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ஆதரவாளர்களிடம் தீவிர விசாரணை 

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ஆதரவாளர்களிடம் தீவிர விசாரணை 
Updated on
1 min read

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ஆதரவாளர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிமுக முன்னாள் மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டி, திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி.

இவர்களுக்குள் 2006 முதல் அரசியல், உள்ளாட்சி பதவிகள் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. தொடர்ந்து இவர்களுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல், கொலை, அடிதடி போன்ற சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.

குருசாமியின் மருமகன் பாண்டி, ராஜபாண்டியின் மகன் உட்பட இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் இரு தரப்பிலும் பதிலுக்குப் பதில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினரும் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகளை சந்திக்கின்றனர். சிலர் சிறையிலும் உள்ளனர். ராஜ்பாண்டி தரப்பால் வி.கே.குருசாமி, அவரது மகனுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் உள்ளதால் இருவரும் வெளியூர்களில் தங்கி தங்கள் மீதான வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கீழ் மதுரை ரயில் நிலையம் பகுதியிலுள்ள குருசாமியின் 2-வது முறையாக எதிர் கோஷ்டியால் வெடிகுண்டு வீசி அவரை கொல்ல முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது.

அவர் வீட்டில் இல்லை என்றாலும், அவரது மனைவி தங்கமுனியம்மாள், மகள் விஜயலட்சுமி உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து கீரைத்துறை போலீஸார் விசாரிக்கின்றனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 4 பேர் வந்து குண்டுகளை வீசி, வாகனங்களை சேதப்படுத்துவது தெரிகிறது. அவர்களின் உருவம் தெளிவாக தெரியாததால் போலீஸாரால் அடையாளம் காணமுடியாத நிலையில், ராஜபாண்டி ஆதரவாளர்களாகவே இருக்க முடியும் என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது.

போலீஸார் கூறுகையில், ‘‘இரு கோஷ்டியிலும் தொடர்ந்து கொலை நடந்தாலும், ஆதரவாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

குறைந்தது இருதருப்பிலும் தலா 40-க்கும் மேற் பட்டோர் இருப்பர். இரு தரப்பிலும் வழக்குகளில் சிக்கி ஜாமினில் உள்ளவர்கள் பெரும்பாலும் மதுரையில் இருப்பதில்லை. ராமநாதபுரம் போன்ற வெளியூர்களில் தங்குவர்.

குருசாமி வீட்டில் இல்லை எனத் தெரிந்தே அவரை மிரட்டவேண்டும் என, கருதி குண்டு வீசி இருப்பதாக தெரிகிறது. ராஜ்பாண்டியன் நெருங்கிய உறவினர் காளி (எ) காளிமுத்துவின் கூட்டாளிகளாக இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். அவரது ஆதரவாளர்கள் சிலர் மதுரையில் இருப்பதால் அவர்களிடம் விசாரிக்கிறோம்,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in