Published : 09 Sep 2015 08:26 AM
Last Updated : 09 Sep 2015 08:26 AM

சட்ட மாணவர்கள் மோதல் விவகாரம்: ஆம்ஸ்ட்ராங் உட்பட 18 பேருக்கு பிடிவாரன்ட்

சென்னை சட்டக் கல்லூரி மாணவர் கள் மோதல் விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆம்ஸ்ட்ராங், ரஜினிகாந்த் உட்பட 18 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

சென்னையில் கடந்த 2008-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தின்போது, பலர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியதில் அய்யாத்துரை என்ற மாணவர் படுகாயம் அடைந்தார். அய்யாத்துரை கொடுத்த புகார் அடிப்படையில், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆம்ஸ்ட்ராங், ரஜினிகாந்த் உட்பட 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுபோல, மாணவர் சித்திரைச்செல்வனை தாக்கியதாக மாணவர்கள் பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, சென்னை 17-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.விஜயலட்சுமி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது ஆஜராகுமாறு இரு தரப்பிலும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தவர்கள் ஆஜராகவில்லை.

நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். அத்துடன் ஆம்ஸ்ட்ராங், ரஜினிகாந்த் உள்ளிட்ட 18 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x