Published : 22 Jul 2020 07:01 AM
Last Updated : 22 Jul 2020 07:01 AM

தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்க தயாரா?- கே.எஸ்.அழகிரிக்கு எல்.முருகன் கேள்வி

தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக் கொள்ள தயாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

பெருந்தலைவர் காமராஜர் அரும்பாடுபட்டு உருவாக்கித் தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சொத்துகள் தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சிப்பதை சுட்டிக்காட்டிய காரணத்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குழப்பத்தில் உள்ளார். தமிழக பாஜக தலைமை அலுவலகம் இயங்கும் இடம் ரூ.30 கோடி மதிப்பு உள்ளதென்றும் அதை ரூ.3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலையையும் இப்போதுள்ள சந்தை மதிப்பையும் ஒன்றுபடுத்தி பேசியிருப்பது அவர் எத்தகைய குழப்பத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ரூ.30 கோடி என்று எந்த அடிப் படையில் நிர்ணயம் செய்தார் என தெரியவில்லை. அவர் குறிப் பிட்டுள்ளபடி ரூ.30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அவர் வாங்கிக் கொள்ள தயாரா?

முக்தா சீனிவாசனின் மகன் முக்தா சுந்தர் பாஜகவில் முக்கிய பொறுப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தை வாங்கும்போது முக்தா சீனிவாசன் காங்கிரஸின் முக்கிய தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிக்கையில் முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x