Last Updated : 16 Jul, 2020 08:09 PM

 

Published : 16 Jul 2020 08:09 PM
Last Updated : 16 Jul 2020 08:09 PM

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணைக்குப் பின் 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்; 30-ம் தேதி வரை காவல்- மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை, காவலர்கள் என, 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது.

மதுரை ஆத்திகுளத்திலுள்ள சிஐபி அலுவலகத்தில் கூடுதல் டிஎஸ்பி சுக்லா தலைமையிலான குழுவினர் விசாரித்தனர். பின்னர் அவர்களை சம்பவ இடத்திற்கு நேற்று முன்தினம் காரில் அழைத்துச் சென்று விசாரித்து, பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

இருவரும் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்பதை காட்சி வடிவில் நடிக்கச் செய்தும் விசாரித்தனர். நேற்று இரவு அவர்கள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடமும் தந்தை, மகனை இறக்கும் வகையில் தாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதா? இதில் வேறு எதுவும் வலுவான காரணம் உண்டா? அரசியல் பின்னணி உள்ளதா? போன்ற பல்வேறு கோணங்களில் தனித் தனியே துருவி, துருவி விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களிடம் தனித் தனியாக எழுத்துப் பூர்வமான வாக்குமூலமும் பெற்றதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை ஐந்து காவலர்களும் மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தியபின், மதுரை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை ஜூலை 30-ம்தேதி வரை காவலில் வைக்க, நீதிபதி ஹேமானந்த் குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களை பலத்த பாதுகாப்பு அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x