Last Updated : 16 Jul, 2020 12:41 PM

 

Published : 16 Jul 2020 12:41 PM
Last Updated : 16 Jul 2020 12:41 PM

புற்றுநோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி கரோனாவில் பலி: மகளைப் பறிகொடுத்து ஊருக்குச் செல்ல வழியில்லாமல் தவித்த பெண்ணுக்கு அமைச்சர், ஆட்சியர் உதவி

ஆட்சியர், அமைச்சரிடம் உதவி கோரிய திலகா

புற்றுநோய் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கரோனா தொற்று ஏற்பட்ட பலியான நிலையில், மகளையும் பறிகொடுத்து ஊருக்குச் செல்ல இயலாமல் தவித்த சிறுமியின் தாயை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்து உதவினர் அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் டி.ஜி.வினய்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்த்த மோகன்ராஜ் - திலகா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள், 4 ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்ராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் திலகா 2 குழந்தைகளை ஏழ்மையிலும் வீட்டு வேலை செய்து வளர்த்து வந்துள்ளார்.

இத்தகைய சூழலில் திடீரென அவரது 16 வயது மகளுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது நாமக்கல் அரசு மருத்துவமனை சிகிச்சையில் தெரியவந்தது.

சிகிச்சை பெற்றுவந்த சிறுமியின் உடல் நலக் குறைவு அதிகரித்ததால் கடந்த ஜீன் 22-ம் தேதி நாமக்கல் மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால், புற்றுநோய் சிகிச்சையுடன் கரோனா சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுமியின் உடலை சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்த நிலையில் பெண்ணின் தாய் திலகா நாமக்கல் செல்ல முடியாமல் 2 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையிலேயே தங்கி இருந்தார்.

மகளையும் இழந்து ஊர் திரும்பவும் இயலாமல் தவித்துவந்த திலகா இன்று (வியாழக்கிழமை) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்ததிற்கு வந்து நிலையைக் கூறி தனக்கு உதவிடும் படி வேண்டுகோள் வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் திலகாவுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் அவரை காரில் நாமக்கல் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திலகாவின் நிலை குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அப்பெண்ணுக்கு வேண்டிய உதவிகள் செய்ய உத்தரவிட்டதோடு அமைச்சர் சார்பில் 2 ஆயிரம் பணமும் கொடுக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x