Published : 15 Sep 2015 08:37 AM
Last Updated : 15 Sep 2015 08:37 AM

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக்காக சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தமிழக இளைஞரை மீட்க நடவடிக்கை

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக் குச் சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சதாம் உசேனை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சதாம் உசேனின் தந்தை இமாம் ஷா, சதாம் உசேன் மனைவி ஜாஸ் மின்பானு, அவரது இரண்டரை வயது மகன் ஷர்கான் ஆகியோரு டன் தேனிக்கு வந்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம், எஸ்.பி. ஜெ.மகேஷ் ஆகியோரி டம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:

எனது மகன் சதாம் உசேனை கும்பகோணம் அருகே உள்ள சோலைபுரத்தை சேர்ந்த காஜா மைதீன் என்பவர் குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்கு அனுப்புவதாக சொல்லி விசா எடுக்க ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் சென்று 40 நாட்கள் முடிந்து விட்டது. ஓட்டுநர் வேலைக்கு சென்ற அவரை ஓட்டுநர் பணி தராமல் கொத்தடிமையாக ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளனர். தகுந்த உணவோ, தங்க இடமோ கொடுக்காமல் அனாதையாக உள்ளார். அவர் அங்கு படும் கஷ்டங்களை வாட்ஸ் அப் மூலம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித் துள்ளார். அந்த ஆதாரங்களை இந்த கடிதத்துடன் (சிடி) இணைத் துள்ளேன். அவரது பாஸ்போர்ட் டையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கின்றனர். அவரை உடலள விலும், மனதளவிலும் கடுமை யாக துன்புறுத்துகின்றனர். இதனால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். எனவே தக்க நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சதாம் உசேன் மனைவி ஜாஸ்மின் பானு கூறுகையில், வாட்ஸ்அப்பில் எனது கணவர் உதவி வேண்டி வீடியோ அனுப்பிய பின்னர் மறுநாள் (3நாட்கள் முன்பு) இன்டர்நெட் மூலம் எனது மாமனார் மற்றும் என்னிடம் பேசினார். அப்போது மிக வும் கஷ்டமாக உள்ளது என வேத னையுடன் கூறினார். இரண்டு நாட் கள் அரசு விடுமுறை என்பதால் இன்று(நேற்று) வந்து புகார் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது இன்னும் ஓரிரூ நாட்களில் சதாம் உசேன் தமிழகம் வந்து விடுவார் என்றார்.

மேலும் பாதிக்கப்பட்டோர் பேட்டி

கம்பத்தைச் சேர்ந்த ஷேக் மைதீன் (இட்லி வியாபாரி) கூறிய தாவது: எனது மகன் காஜா மைதீன் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சி மற்றும் கம்பத்தைச் சேர்ந்த 2 பேர் ரூ. 80 ஆயிரம் வாங்கினர். ஆனால், கூறியபடி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பித் தரவில்லை. மேலும், இவர்கள் தாதப்பன்குளம் பகுதி யில் உள்ள 7 பேரிடம் ரூ. 12 லட் சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், நாங் கள் கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட் இதுவரை கிடைக்க வில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த அரசமணி (லாரி ஓட்டுநர்) என்பவர் கூறியது: கம்பம் மெட்டு காலனி நந்த கோபால் கோயில் அருகே, ஒரு நபரை ஓட்டுநர் வேலைக்கு அழைத் துச் சென்றனர். ஆனால், அவரை ஒட்டகம் மேய்க்க வைத்துள்ளனர். பின்னர், அவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். 4 மாதங்களுக்கு முன் வேறு ஒரு ஏஜென்சி மூலம், கத்தாரில் அவர் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார்.

கம்பத்தை சேர்ந்த மணி (டெய்லர்) என்பவர் கூறியது: எனது மகனுக்கு சிங்கப்பூரில் பிட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், கம்பத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரூ. 2 லட்சம் கொடுத் தேன். தொழில் கற்றுக் கொடுத்து நல்ல வேலையும், நல்ல சம்பளமும் வாங்கித் தருவதாக அவர் கூறி னார். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு கூறியபடி வேலை வாங்கி தரவில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த வியாபாரி சம்சுதீன் கூறியது: எங்கள் பகுதி யைச் சேர்ந்த கேட்டரிங் முடித்த ஒரு இளைஞரை, குவைத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமை யல் வேலைக்காக அழைத்துச் சென்றனர். சமையல் சரியில்லை எனக் கூறி, அவரை பாத்திரம் கழுவ வைத்துள்ளனர்.

பேசியபடி சம்பளம் கொடுத்ததால், அங்கேயே பணிபுரிந்து வருகிறார். வெளி நாடு செல்லும் முன் நம்பகமான நிறுவனங்கள்தானா என தீவிர விசாரணை செய்ய வேண்டும். நிறு வனங்கள் குறித்து காவல்துறை யினரிடம் ஆலோசனை கேட்டு, அதன்பின் வேலைக்குச் செல்வதே சிறந்தது. இதேபோல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளியே சொல்லத் தயங்கி வருகின்றனர் என்றார்.

முறையாக வெளிநாடு செல்வது எப்படி?

வெளிநாடுகளில் வேலை செய்யும் மற்றும் வேலை தேடும் நபர்களுக்காக ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்' செயல்பட்டு வருகிறது. ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், முதல் மாடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், எண் - 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை - 600 020' என்ற முகவரியில் இது இயங்கி வருகிறது. தொலைபேசி எண்கள் 044 - 24464267, 24464268.

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்களது விவரங்களை இங்கு பதிவு செய்து கொண்டால் அவர்களின் பாதுகாப்பை குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்நிறுவனம் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ளும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களும் இதேபோல பதிவு செய்து கொண்டால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு தகவல் கொடுக்கப்படும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகள்:

தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை ரூ.600 முதல் ரூ.1000 வரை மாறுபடும். விண்ணப்பங்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

அவசர உதவிகளுக்கான தொடர்பு எண்கள்:

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அவசர உதவிகளுக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளை தெரிவித்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரச்சினையில் சிக்கினால்..?

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அங்கு சரியான வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படாமல் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் அதுகுறித்து அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார். மறுவாழ்வுத்துறை அலுவலக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கியிருக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு இந்த புகாரை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள்.

தூதரக அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி பிரச்சினையில் சிக்கியுள்ள நபரை மீட்டு அவர் வேலை பார்த்த நாட்களுக்குரிய சம்பளம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

நேரடியாக மறுவாழ்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தவிர, மத்திய அரசு நிறுவனமான புரொடெக்டர் ஆஃப் எமிக்ரண்ட்ஸ் (குடியேறியவர்களின் பாதுகாப்பு அலுவலர் சென்னையில் அசோக் நகரில் உள்ளது) எனும் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். இந்த அலுவலருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களை கவனிப்பதுடன் தனியார் ஏஜண்டுகளை கண்காணிக்கும் அதிகாரமும் உண்டு.

ஏழை இளைஞர்களை பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் ஏஜண்டுகள் மீதும் இந்த துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், வெளிநாட்டில் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்திய பிரஜைகளையும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்க உதவி செய்வார்கள்.

ஏஜென்ஸி உண்மையானதா?

தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய அந்த ஏஜென்ஸியின் பெயர் www.moia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பெயர் இருந்தால் அந்த ஏஜென்ஸி மூலம் வேலைக்கு செல்லலாம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x