

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேர 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வரும் 28-ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், பிஎட் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அட்டவணையை தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளரும், சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை பாரதி நேற்று வெளியிட்டார். அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி அக்டோபர் 5-ந் தேதி நிறைவடைகிறது. தினமும் காலையில் 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் கலந்தாய்வு நடைபெறும்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 16-ம் தேதி முதல் அனுப்பப்படும் என்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்றும் பேராசிரியை பாரதி தெரிவித்தார்.
கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கும்
கடந்த ஆண்டு வரையில் அரசு மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 2,100 பி.எட். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) புதிய விதிமுறை காரணமாக, கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் பி.எட். இடங்களின் எண்ணிக்கை 1,777 ஆக குறைந்துவிட்டது. எனவே, இந்த ஆண்டு பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு பொறியியல் பட்டதாரிகளுக்கும் பி.எட். படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதால் அறிவியல் பிரிவுகளில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.