Published : 02 Jul 2020 07:22 AM
Last Updated : 02 Jul 2020 07:22 AM

காஞ்சியில் அத்திவரதர் எழுந்தருளி ஓராண்டு நிறைவு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நகரம்

கடந்த ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் விழா தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த விழாவின்போது மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.

கடந்த 1979-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி காட்சி அளித்தார். 1979-ம் ஆண்டு 48 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவை மொத்தம் 3 லட்சம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத அளவில் இந்த விழாவில் கடந்த ஆண்டு 3 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து பங்கேற்றனர்.

இந்த விழா நடைபெற்று முடிந்த பிறகும் அத்திவரதர் சயனித்த குளத்தை பலர் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அத்திவரதர் எழுந்தருளிய அதே நாளான நேற்று அந்த விழாவை நினைவுகூரும் வகையில் பலர் கோயிலுக்கு வந்திருப்பர்.

ஆனால், ஊரடங்கு காரணமாக முக்கிய கோயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன. அனுமதி இல்லாததால் பொதுமக்கள் யாரும் வரவில்லை. மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சார் ஆட்சியர் சரவணன் ஆகியோர் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று அத்திவரதர் சயனித்த குளத்தை பார்வையிட்டனர். மூலவரையும் தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x