Published : 20 Jun 2020 01:17 PM
Last Updated : 20 Jun 2020 01:17 PM

கரோனா காலத்திலும் ஊழல்; தனியார் நிறுவனங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது மனிதநேயமற்ற செயல்; கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்றால் மக்கள் உயிரிழக்கும் இந்த நிலையிலும், தனியார் நிறுவனங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது மனிதநேயமற்ற செயல் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பேரிடர் காலத்தில் உயிரைக் கொடுத்துப் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஊதியம் தராமல் இழுத்தடித்தால் கிரிமினல் தண்டணை கொடுக்கப்படும் என, மத்திய, மாநில அரசுகளைப் பார்த்து உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படும் மருத்துவர்கள், மற்றொரு தாயாக பாவிக்கப்படும் செவிலியர்கள், நோய்ப் பரவலை எதிர்த்து நேரிடியாகப் போராடும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத சூழலை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் இந்த அரசுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதில் ஆச்சரியம் இல்லை.

தமிழகத்தில் பல முதுகலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் கடுமையாக கசக்கிப் பிழிந்து வேலை வாங்கப்பட்டு, பல மாதங்களாக ஊதியம் பெறாமல் அவதிப்படும் பரிதாப நிலையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயிரைக் காப்பாற்றுபவர்களையே மதிக்காத அரசுகள், உயிருக்குப் போராடும் ஏழை, எளிய நோயாளிகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்வார்கள்?

தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் சில நகராட்சி மருத்துவமனைகளில் கரோனா பணிக்காக சில சுகாதாரப் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் தேர்வு செய்தனர். அவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.550 தருவது என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.450 மட்டுமே தரமுடியும் என அந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் பேரம் பேசுகிறது. இவ்வாறு நடந்து கொள்ளும் அளவுக்கு அந்த நிறுவனத்துக்கு யார் தைரியம் கொடுத்தது?

சென்னையில் உள்ள மிக முக்கிய 5 அரசு மருத்துவமனைகளுக்கான 13 பிரிவுகளில் மொத்தம் 2,355 பணியாளர்கள் பணியிடங்களுக்கு தம்மிடம் விண்ணப்பிக்கலாம் என 'ஜென்டில்மேன்' என்ற நிறுவனம் விளம்பரம் தந்தது. விண்ணப்பித்தவர்களிடம் மூன்று மாதகால தற்காலிகப் பணிக்கு ஒரு மாத ஊதியத்தை அந்த நிறுவனம் கமிஷனாகக் கேட்ட விவரம் ஊடகங்களில் வெளியானதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

கரோனா தொற்றால் மக்கள் உயிரிழக்கும் இந்த நிலையிலும், ஊழல்களைச் செய்வதும், தனியார் நிறுவனங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதும் மனிதநேயமற்ற செயல் அல்லவா? சுகாதாரத்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த இக்கட்டான நிலையிலும் ஊழல் செய்வது கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற அவலங்கள் நிகழும் சூழலில்தான், உச்ச நீதிமன்றம் உரக்கக் குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் எல்லாம் கடவுளுக்குச் சமமானவர்கள் என்றும், சுகாதாரப் பணியாளர்களின் கால்களைக் கழுவி வணங்க வேண்டும் என அரசுகள் இதுவரை சொல்லிவந்தது கபட நாடகமே என்பதை, உச்ச நீதிமன்றம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் கோபத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இனியாவது மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x