Published : 09 Jun 2020 03:04 PM
Last Updated : 09 Jun 2020 03:04 PM

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி; வைகோ வரவேற்பு

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்திருப்பது, மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கை:

"ஜூன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வு பெற்றதாக, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், 11 ஆம் வகுப்புத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும், 12 ஆம் வகுப்புத் தேர்வுக்கு, வருகைப் பதிவேடும், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுள் 80 விழுக்காடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருப்பது, எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தருகின்றது.

கரோனா தொற்றைக் காரணம் காட்டி, பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஏப்ரல் 7-ம் தேதி முதன்முதலில் நான் அறிக்கை கொடுத்து இருந்தேன். அதுகுறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 'வைகோ இவ்விதம் அறிக்கை கொடுத்து இருக்கின்றார்' என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

மீண்டும் மே 13 ஆம் தேதி அன்று, தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அறிக்கை கொடுத்தேன். மூன்றாவது முறையாக, ஜூன் 8 ஆம் தேதி அறிக்கை கொடுத்து, தேர்வுகளை ரத்து செய்யக் கோரி வலியுறுத்தி இருந்தேன் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலை வணங்கி நன்றி செலுத்துகின்றேன்.

திமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நாளை நடத்துவதாக அறிவித்த அறப்போராட்டமும், இதற்கு ஒரு காரணம் என்பதில் மகிழ்கின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x