Published : 31 May 2020 06:42 AM
Last Updated : 31 May 2020 06:42 AM

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி- உயர் நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, பட்டியலினத்தவர்கள் பற்றி விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதியை கடந்த 23-ம் தேதி போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு, மே 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

போலீஸ் தரப்பில் மனு

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீ்ஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணைஉயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக ஏற்கெனவே நடந்தது.அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில்மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரமும், போலீஸ் தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.நிர்மல்குமார், ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செயயக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தன்றே அவரது ஜாமீன் மனுவை விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x