Published : 26 May 2020 06:41 AM
Last Updated : 26 May 2020 06:41 AM

நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் கரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக தனித்தனி வாயில் அமைக்க வேண்டும்: தலைமைச் செயலர் சண்முகம் அறிவுறுத்தல்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கரோனா அறிகுறி உள்ளவர்கள் வந்து செல்ல இருவேறு வாயில்கள் உருவாக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா தடுப்பு தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்படி, ஊடரங்கு குறித்த வழிகாட்டு நெறிகளை தமிழக அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தொற்றுப் பரவலுக்கான ஹாட் ஸ்பாட்களாக கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். தரைகளை தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நோயாளிகள் காத்திருக்கும் பகுதி, மேஜை, நாற்காலிகள், நோயாளிகளை பரிசோதிக்கும் அறை உள்ளிட்ட நோயாளிகள் வந்து செல்லும் அனைத்துபகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

தற்போது நகர்ப்புற பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றுஅதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், சென்னைமாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், கரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகள் வருவதற்கும், செல்வதற்கும் தனித்தனி வழிகள் ஏற்படுத்த வேண்டும். இதுதவிர, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தொற்றில்லா நோய் பாதித்தவர்கள், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிகளில் நோய்த் தடுப்பு மற்றும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x