Last Updated : 24 May, 2020 04:39 PM

 

Published : 24 May 2020 04:39 PM
Last Updated : 24 May 2020 04:39 PM

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: மின்வாரிய மின்னஞ்சலால் பயனீட்டாளர்கள் அதிர்ச்சி

மதுரை

கரோனா ஊரடங்கால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், மின்வாரியத்தின் மின்னஞ்சலால் மின் பயனீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால் மார்ச் 24 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது.

கடைசியாக மார்ச் 25 முதல் ஜூன் 5 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர் ஜூன் 6 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின்வாரியம் சார்பில் மே 19-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்புக்கு மாறாக மின் கட்டணத்தை அதற்கான காலக்கெடுவிற்குள் செலுத்துமாறு மின் பயனீட்டார்களுக்கு மின்வாரியம் மின்னஞ்சல் அனுப்பி வருகிறது.

மின் கணக்கீடு முடிந்ததும் மின் கட்டணம் தொடர்பாக ஒவ்வொரு பயனீட்டாளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படும். அதில் மின் கட்டணம், அதை செலுத்துவதற்கான காலக்கெடு குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அபராதத்துடன் கட்டணம் செலுத்திய பிறகு இணைப்பு மீண்டும் வழங்கப்படும்.

ஊரடங்கால் வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கியதால் மின் கட்டணம் செலுத்துவதை தள்ளிப்போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மின் கட்டணம் செலுத்தாவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு மின்வாரியம் சார்பில் நினைவூட்டல் மின்னஞ்சல் தற்போது அனுப்பப்பட்டு வருகிறது. இது மின் பயனீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒத்தக்கடையைச் சேர்ந்த இஸ்மாயில் கூறுகையில், ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தொழில் நலிவடைந்துள்ளது. வேலையில்லாமலும், பணம் இல்லாமலும் மக்கள் வாடுகின்றனர். மக்களின் நிலையை அறிந்தே மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஒவ்வொரு ஊரடங்கின் போதும் நீட்டிக்கப்படுகிறது.

தற்போது ஜூன் 6 வரை அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலக்கெடுவிற்குள் மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். இதை மின்வாரியம் கைவிட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x